*கனவுலகவாசி (பகுதி 8)
#சிவசங்கர்
உன் ஆழ் மனது
ஆசைகளே கனவில்
அருவியாய்க் கொட்டுவன!!
சரி!!
நீ கண்ட கனவுகளில்
ஏதேனும் மறக்க முடியாதவை
இருக்கிறதா??
ஆம் இருக்கிறது!!!
ஏனோ கனவுகள் தன் கற்பனைக்கு
எல்லைகளை நிர்ணயிப்பது இல்லை...
லட்சம் கோடி செய்து எடுக்கப்படும் சினிமாவில்
பார்த்திட முடியாதவற்றை கூட காட்டும் கனவு!!!
ஓடி ஆடி விளையாண்டுக் கொண்டிருந்தேன்..
அந்த தருணம் , எதேச்சையாக சில பூக்களை வீச,
ஆளுயரக் கண்ணாடி தூள் தூளாய் போனது !!
எப்படி நடந்ததென்று நான் சிந்திப்பதற்குள்,
உடைந்த சில்லுகள் நொடியில் ஒட்டிக்கொண்டன !!
ஆனால் மீண்டும் முகம் பார்க்கையில்
பல உருவங்களாய் அது காட்டியது !!
இரவு உணவுக்கு அமர்ந்தேன்.,
என் வட்டலில் வைக்கப்பட்ட ஒவ்வொரு இட்லிக்கும் ,
அம்மா, மொட்டை மாடிக்குச் சென்று
நிலவை நகலெடுத்துக் கொண்டு வந்தாள் !!
நான் திண்ண திண்ண ,
வானத்தில் நிலவு தேய்ந்து கொண்டே போனது
ஜன்னல் வழியே தெரிய,
உண்பதை நிறுத்தி விட்டேன் !!
உடல் ஜில்லென்று குளிர,
கொதிக்கிறது என்று சொல்லி,
மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்..
அங்கு ஒரு எருமை மாட்டுக்காரன்
வரவேற்பரைப் பெண்ணிடம் இருந்து
ஒரு நீளமான பெயர் பட்டியலை
வாங்கிக்கொண்டிருந்தான்...
அவன் எமன் என்று அப்போது புலப்படவில்லை!!
மனிதர்களின் கடி தாள முடியாமல்,
மருந்தகத்தில் ஒரு டசன் கொசுக்கள் நின்று
ஓடோமஸ் வாங்கிக்கொண்டிருந்தன !!
தலைவலி தலைக்கேறி
தற்கொலை செய்துகொள்ள
பூமியில் இருந்து குதித்தேன் !!
வானத்தை நோக்கி விழுந்தேன் !!
அங்கு அம்மா வேகமாக வந்து
தற்கொலை செய்துகொண்டதற்கு தண்டனையாக
தனியொரு அறையில் வைத்து தாழிட்டாள் !!
இனியொரு முறை சாக மாட்டேன் என்று
சொன்ன பிறகே என்னை விடுவித்தாள் !!
தூங்கி எழுந்தவுடன் கனவென்று தெளிந்தேன் !!
அடுத்த நாள்
என் வீட்டுக்கண்ணாடி உடைந்தது !!
அன்று இரவு இட்லி உண்டேன் !!
காய்ச்சல் வந்தது !!
மருத்துவமனை செல்ல நேர்ந்தது !!
மருந்தகம் சென்றேன் !!
ஆனால் நான் மட்டும் சாகாமல் இருந்தேன் !!
"இந்த கனவில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே...யாரையும் குறிப்பிடுவன அல்ல"
என்ற ஒரு எச்சரிக்கை வாசகத்தையும்
சேர்த்துக் காட்டியிருக்கலாம் அந்தக் கனவு !!!!
தென்னங்கீற்றில் கொட்டிய
மழையாய் அவள் சிரித்தாள்!!!
- கனவுலகில் பயணிப்போம்.
No comments:
Post a Comment